துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் - தம் நெருங்கிய வுறவினர் குற்றத்தையும் அவர்புறத்துத் தூற்றும் இயல்புடைய வன்னெஞ்சர்; ஏதிலார் மாட்டு என்னை கொல் - அயலார் செய்தியில் எத்தகையவராவார்.
'குற்றமும்' என்பது துன்னியாரை நோக்கிய சிறப்பும்மை, தூற்றுதல் என்பது களத்திற் பொலி தூற்றுதல்போலப் பலருமறியப் பரப்புதல். மிகக் கொடியவராவர் என்பது பற்றியும் அறியப்படாமை பற்றியும் 'என்னை கொல்' என்றார். 'என்னர் கொல்' என்னும் பாடமும் ஏற்றதே. 'கொல்' ஐயம்.
கலைஞர் உரை:
நெருங்கிப் பழகியவரின் குறையைக்கூடப் புறம் பேசித் தூற்றுகிற
குணமுடையவர்கள் அப்படிப் பழகாத அயலாரைப் பற்றி என்னதான் பேச
மாட்டார்கள்?
சாலமன் பாப்பையா உரை:
தன்னோடு நெருக்கமானவர்களின் குற்றத்தையும் அவர் இல்லாத நேரம் பேசும் இயல்புடையவர்கள், அயலார் காரியத்தில் என்னதான் பேசமாட்டார்கள்!.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(கோள் சொல்லுகிறவர்கள்) பிளவு உண்டாகும்படி புனைந்து பேசி, மனமொத்த நண்பர்களையும் பிரித்துவைத்து விடுவார்கள். மகிழ்ச்சி உண்டாகும்படி நல்ல வார்த்தைகளைச் சொல்லி நட்புண்டாக்குவது அவர்களுக்குத் தெரியாது. 189 (இப்படிப்பட்டவர்களை இந்த உலகம் ஏன் சுமந்து கொண்டிருக்கிறது?) ஒருவன் இல்லாத சமயம் பார்த்து அவனைப் பற்றிப் பொய்களைச் சொல்லிக் கோள் மூட்டுகிறவனுடைய பாரத்தையும் இந்தப் பூமி சுமந்துகொண்டிருப்பது தன் கடமையைக் கருதியோ?