முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை பின்னூறு இரங்கி விடும்.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
வரும் இடையூறுகளை முன்னே அறிந்துக் காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைத்து இரங்குவான்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
முன்னுறக் காவாது இழுக்கியான் - தன்னால் காக்கப்படும் துன்பங்களை அவை வருவதற்கு முன்னே அறிந்து காவாது மறந்திருந்தான், பின் ஊறு தன்பிழை இரங்கிவிடும் - பின்வந்துற்ற காலத்துக் காக்கல் ஆகாமையின் அப்பிழைப்பினை நினைத்து இரங்கிவிடும். (காக்கப்படும் துன்பங்களாவன: சோர்வு பார்த்துப் பகைவர் செய்வன. 'ஊற்றின்கண்' என்புழி உருவும் சாரியையும் உடன் தொக்கன. உற்ற காலத்துக் காக்கல் ஆகாமையின், இரங்கிவிடும் என்றார். இவை மூன்று பாட்டானும் பொச்சாப்பு உடையார்க்கு வரும் ஏதம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
தன்னாற் காக்கப்படும் துன்பங்களை அவை வருவதற்கு முன்னே அறிந்து காவாது மறந்திருந்தான், பின் வந்துற்றகாலத்துக் காக்கலாகாமையின் அப்பிழைப்பினை நினைந்திரங்கிவிடும்.
தேவநேயப் பாவாணர் உரை:
முன் உறக்காவாது இழுக்கியான் - தன்னால் தடுக்கப்படவேண்டிய துன்பங்களை அவை வருமுன்பே யறிந்து தன்னைக்காவாது மறந்திருந்தவன் ; பின் ஊறு தன் பிழை இரங்கி விடும் - பின்பு அவை நேர்ந்த பொழுது தடுக்க லாகாமையின் தன்தவற்றையெண்ணி வருந்தியழிவான்.
காக்கவேண்டிய துன்பங்கள் ; பகைவர் சோர்வு பார்த்துச் செய்வனவும் பஞ்சம் வெள்ளம் முதலியனவுமாம் . ஊற்றின்கண் என்பது உருபுஞ் சாரியையும் உடன்தொக்கு நின்றது . விடுதல் நீங்குதல்; இங்கு அழிதல்.
துன்பங்கள் வரும் முன்பே அவற்றைத் தடுக்காமல் மறந்திருந்தவன், பின் அவை வந்தபோது தடுக்க முடியாமல் தன் பிழையை எண்ணி வருந்துவான்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(ஏனென்றால்) இன்ப காலத்தில் தன் கடமைகளை மறக்கிறவன் பின்னால் வரக்கூடிய துன்பங்களை உணர்ந்து முன்னெச்சரிக்கை செய்ய முடியாத குற்றமுடையவன். அக் குற்றத்தால் பின்னால் துன்பங்கள் வந்தே தீரும். அதனால் அவன் நொந்தே போவான்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
வருகின்ற துன்பங்களை முன்னதாகவே அறிந்து காத்துக் கொள்ளாமல் மறந்திருந்தவன், பின்னர் தனது பிழையினை நினைத்து இரங்கிக் கவலைப்படுவான்.
Translation
To him who nought foresees, recks not of anything,
The after woe shall sure repentance bring.
Explanation
The thoughtless man, who provides not against the calamities that may happen, will afterwards repent for his fault.