திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
கண்ணோட்டதிற்க்கு உரிய கண்ணோடுப் பொருந்தி இருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் (கண் இருந்தும் காணாத ) மரத்தினைப் போன்றவர்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
கண்ணோடு இயைந்து கண்ணோடாதவர் - ஓடுதற்கு உரிய கண்ணோடு பொருந்திவைத்து அஃது ஓடாதவர்; மண்ணோடு இயைந்த மரத்து அனையர் - இயங்காநின்றாராயினும் மண்ணொடு பொருந்தி நிற்கின்ற மரத்தினை ஒப்பர். ('ஓடாதவர்' என்புழிச் சினைவினை முதல்மேல் நின்றது. மரமும் கண்ணோடு இயைந்து கண்ணோடாமையின். இது தொழில் உவமம். அதனைச் சுதைமண்ணோடு கூடிய மரப்பாவை என்று உரைப்பாரும் உளர். அஃது உரையன்மை, காணப்படும் கண்ணானன்றி, அதனுள் மறைந்து நிற்கின்ற ஒருசார் உள்ளீட்டால் கூறினமையானும், மரக்கண்ணோ மண்ணாள்வார் கண்ணென்று, இரக்கண்டாய் (புறத்திரட்டு 1555 முத்தொள் ) என்பதனானும் அறிக.)
மணக்குடவர் உரை:
சுதைமண்ணோடு கூடச்செய்த மரப்பாவையோடு ஒப்பார்: ஒருவன் கண்ணோடு தங்கண்கலந்தபின்பு கண்ணோட்டத்தைச் செய்யாதவர்.
இது கண்ணோடாமை மரப்பாவைக்கு ஒக்கும் என்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
கண்ணோடு இயைந்து கண்ணோடாதவர்- கண்ணோடு பொருந்தியிருந்தும் கண்ணோடாத வன்னெஞ்சர்; மண்ணோடு இயைந்த மரத்து அனையர்- இயங்குதிணையராயினும் நிலைத்திணையைச் சேர்ந்ததும் மண்ணோடு பொருந்தியதுமான மரத்தைப் போல்வர்.
மரமுங் கண்ணோடியைந்து கண்ணோடாமையின் கண்ணோடாதவர்க்கு சிறந்த உவமமாயிற்று. இது வினையுவமை.மரக்கண்ணாவது அதன் கணு."மரக்கண்ணோ மண்ணாள்வார் கண்" (முத்தொள்.101). கணுக்கணுவாயிருப்பதால் மூங்கிலுங் கண்ணெனப்படும். புறக்கண் கண்டவழி ஓடுவது அகக்கண்ணேயாயினும் ,வழியாயிருத்தல் பற்றியும் பெயரொப்புமை பற்றியும் பின்னதன் வினை முன்னதன்மேல் ஏற்றிக் கூறப்பட்டது. கண்ணோடுதல் என்பது ஒரு சொற்றன்மைப்பட்டு முதல் வினையாய் நின்றது.' மரம்' வகுப்பொருமை. மண்ணோடியைந்த மரம் என்பதற்குச் "சுதை மண்ணோடு கூடச்செய்த மரப்பாவை" என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும் உரைத்திருப்பது ஒரு சிறிதும் பொருந்தாது.
கலைஞர் உரை:
ஒருவர்க்குக் கண் இருந்தும்கூட அந்தக் கண்ணுக்குரிய அன்பும்
இரக்கமும் இல்லாவிட்டால் அவர் மரத்துக்கு, ஒப்பானவரே ஆவார்.
சாலமன் பாப்பையா உரை:
கண் பெற்றிருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் இயங்கினாலும் மண்ணோடு சேர்ந்து இயங்காமல் நிற்கும் மரம் போன்றவரே.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(மேலும்) கண்ணிருந்தும் கண்ணை ஒட்டி ஆராய்ந்தறிய முடியாதவர்கள் கால்களிருந்தும், ஓடித் திரிந்து ஆராய்ந்து அறிந்து கொள்ள இடம் விட்டுப் பெயர முடியாமல் நின்ற நிலத்தோடு நிற்கிற மரத்துக்கே ஒப்பானவர்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
கண்ணோட்டம் இருக்க வேண்டிய கண்களோடு பொருந்தி, அதற்குரிய கண்ணோட்டம் இல்லாதவர்கள் மண்ணோடு பொருந்தி இருக்கின்ற மரத்தினை ஒப்பர்.
Translation
Whose eyes 'neath brow infixed diffuse no ray
Of grace; like tree in earth infixed are they.
Explanation
He They resemble the trees of the earth, who although they have eyes, never look kindly (on others).