அறன் இழுக்காது - ஆட்சித்தலைவனுக்குரிய அறவொழுக்கத்தினின்று தவறாது; அல்லவை நீக்கி - அறமல்லாதவை தன்னாட்டிற் பிறராலும் பிறவுயிர்களாலும் நிகழ்வதையும் நீக்கி; மறன் இழுக்கா மானம் உடையது - போர்மறத்திலும் மாசில்லாத பெருமையுடைவனே தகுந்த அரசனாவான்.
"அறநெறி முதற்றே யரசின் கொற்றம்
அதனால் தமரெனக் கோல் கோடாது
பிறரெனக் குணங்கொல்லாது
ஞாயிற் றன்ன வெந்திற லாண்மையுந்
திங்க ளன்ன தண்பெருஞ் சாயலும்
வானத் தன்ன வண்மையு மூன்றும்
உடையை யாகி"(புறம். 55)
என்பதனால், அரசவறத்தின் தன்மை அறியப்படும். பரிமேலழகர் கூறிய ஓதல், படைக்கலம்பயிறல் என்பவை அரசன் கடமைகளேயன்றி அறமாகா. அவற்றை அறமெனக் கொள்வது ஆரிய முறையாம். மேலும் வேட்டல் என்பது தமிழரசர்க்குரிய தொழிலன்று. முது குடுமிப் பெருவழுதியும் பெருநற்கிள்ளியும் பல்யானைச்செல்கெழு குட்டுவனும் தம் பேதைமையால் ஏமாற்றப்பட்டே ஆரிய வேள்விகளை வேட்டனர் என அறிக. வேட்டலுக்குப் பகரமாக வேட்டஞ் செய்தலைக்கொள்க.
மாநிலங்கா வலனாவான் மன்னுயிர்காக் குங்காலைத்
தானதனுக் கிடையூறு தன்னால்தன் பரிசனத்தால்
ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர்தம்மால்
ஆனபயம் ஐந்துந்தீர்த் தறங்காப்பான் அல்லனோ.
(பெரிய, 4:36)
என்பதனால், அரசன் அறனிழுக்காது அல்லவை நீக்குதல் அறியப்படும். மறனிழுக்கா மானமாவது, "அழிகுநர் புறக்கொடை யயில்வா ளோச்சாக் கழிதறு கண்மை யும்"(பு. வெ. 55),
"ஏறுண்டவர் நிகராயினும் பிறர்மிச்சிலென் றெறியான்
மாறன்மையின் மறம்வாடுமென் றிளையாரையு மெறியான்
ஆறன்மையின் முதியாரையு மெறியானயி லுழவன்"
என்பதும் (சீவக. மண்மகள். 160),
'தானால் விலங்கால் தனித்தால் பிறன்வரைத்தால்
யானை யெறித லிளிவரவால் - யானை
ஒருகை யுடைய தெறிவலோ யானும்
இருகை சுமந்துவாழ் வேன். (பெருந். 720)',
என்பதுமாம். அரசனது தன்மை அரசின் மேல் சார்த்திக் கூறப்பட்டது சார்ச்சி வழக்கு.
கலைஞர் உரை:
அறநெறி தவறாமலும், குற்றமேதும் இழைக்காமலும், வீரத்துடனும்,
மானத்துடனும் ஆட்சி நடத்துபவர்களே சிறந்தவர்களாவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
தனக்குச் சொல்லப்பட்ட அறத்திலிருந்து விலகாமல், அறமற்ற கொடுமைகள் தன் நாட்டில் நடைபெறாமல் விலக்கி, வீரத்தில் தவறாமல் நின்று மானத்தைப் பெரிதாக மதிப்பதே அரசு.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அரசனுடைய நெறி முறை எதுவென்றால்) தன்னுடைய தர்மங்களில் தவறாமல், குடிகளிடத்தில் அதர்மம் ஏற்பட்டால் அவற்றை நீக்குவதற்கு, அளவுக்கு அதிகப்படாத தண்டனை விதிக்கும் பெருந்தன்மை உள்ளவனே நல்ல அரசன்.